கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்படுவதால், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, தனது மகனை கட்சியின் மாவட்டச் செயலராக்கத் திட்டமிட்டுள்ளதாக தேமுதிக மாவட்டச் செயலர் விமர்சித்தார்.
விழுப்புரத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலர் வெங்கடேசன் பேசியதாவது:
திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, இங்கு 3 முறை அமைச்சராக இருந்தவர். பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் திமுக ஆட்சிக் காலத்தில், பெரிய மாவட்டமான விழுப்புரத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
அமைச்சர் சி.வி.சண்முகம், குமரகுரு எம்எல்ஏ ஆகியோரது முயற்சியால் தற்போது அதிமுக ஆட்சியில், கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக பிரித்து அறிவித்துள்ளனர். இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பெரிய மாவட்டத்தை பிரிக்க நடவடிக்கை எடுக்காத பொன்முடி தற்போது, தனி மாவட்டம் உருவாக உள்ளதால், அங்கு தனது மகன் கெளதமசிகாமணியை மக்களவைத் தேர்தலில் நிற்க வைத்து, அதன் மூலம் மாவட்ட திமுக செயலராக தனது மகனை நியமிக்க திட்டம் தீட்டியுள்ளார்.
இதை அறிந்த திமுகவினர் அவருக்கு எதிராக தேர்தல் பணியாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தேமுதிகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் என்றார்.