விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார் மனு தாக்கல் செய்ய சென்ற போது, வேட்புமனுவை கொண்டு செல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார் வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு வந்தார். வேட்பு மனு படிவத்தை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இல.சுப்பிரமணியன் கேட்ட போது, ரவிக்குமாரிடம் படிவம் இல்லாதது தெரிய வந்தது.
உடனே, வெளியே நின்ற வழக்குரைஞரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு வேட்புமனுவை கொண்டு வருமாறு கூறினார்.
வேட்பாளரையும் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி என தேர்தல் அலுவலர் தெரிவிக்கவே, அவருடன் வந்திருந்த ஒருவர் வெளியே சென்று வேட்புமனு படிவத்தை வாங்கி வந்து கொடுத்தார். அதன்பிறகு, துரை.ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து, பிற்பகல் 2.55 மணிக்கு மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அன்பின் பொய்யாமொழி அவசர, அவசரமாக மனு தாக்கல் செய்தார். பின்னர், அவரது மனைவி சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
கடந்த 23-ஆம் தேதி விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் மனு தாக்கல் செய்தார். வைப்புத் தொகைக்கான பணத்தை உதவியாளரிடம் கொடுத்து வைத்திருந்தார். மனு தாக்கலின் போது அவர் உள்ளே வரவில்லை. இதையடுத்து, தேமுதிக மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் ரூ.10 ஆயிரத்தைக் கொடுத்தார். பின்னர், வடிவேல் ராவணன் தான் வைத்திருந்த ரூ.2,500-ஐயும் சேர்த்து வைப்புத் தொகையாக 12,500 ரூபாயை செலுத்தினார்.