கள்ளக்குறிச்சி அருகே பேருந்தில் இருந்து கல்லூரி மாணவி திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவர்பலத்த காயமடைந்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் கனிமொழி (20).
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள காட்டுகொட்டாய் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரியில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்காக, கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்ட அரசுப் பேருந்தில் சக மாணவ தோழிகளுடன் பயணித்தார்.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள உலகங்காத்தான் அருகே பேருந்து வந்த போது, திடீரென எழுந்த கனிமொழி, "நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன், எனது பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்' என உரக்க குரலெழுப்பியபடி பேருந்தில் இருந்து குதித்து விட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை அப்படியே நிறுத்தி விட்டார். சாலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்த மாணவி, ஆட்டோ மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடனடியாகச் சேர்க்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து, தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.