கள்ளக்குறிச்சி நகராட்சி, 20-ஆவது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சி 20-ஆவது வார்டுக்கு உள்பட்ட பெரியார் நகரில் 3 சிறு மின்விசை பம்புகளுடன் கூடிய குடிநீர்த் தொட்டிகள் உள்ளன. இந்த 3 சிறு மின்விசை பம்புகளிலும் தண்ணீர் வருவதில்லை.
இதனால், அந்தப் பகுதி மக்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், நகராட்சி சார்பில் தெருக் குழாய்கள் மூலம் வாரத்துக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, அத்தியாவசியப் பயன்பாட்டுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் பெரியார் நகர் பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால், அதிருப்தியடைந்த அந்தப் பகுதி மக்கள், நகராட்சி சார்பில் டேங்கர் லாரி மூலம் நாள்தோறும் குடிநீர் வழங்கக் கோரி, கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையில் அரசு நடுநிலைப் பள்ளி முன் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்க.விஜயகுமார் தலைமையிலான போலீஸார் மற்றும் நகராட்சி ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர் மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சிறு மின்விசை பம்புகளை சீரமைக்கவும், லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோபிநாத் உறுதியளித்தார்.
இதனை ஏற்று பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனர்.