அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி திணிப்பைக் கண்டித்து, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் ஜூன் 3-ஆம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளது.
விழுப்புரத்தில் அந்தச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் ப.இளங்கோவன் தலைமை வகித்தார். துணைச் செயலர் க.சிவகாமி வரவேற்றார். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பொதுச் செயலர் சு.ஆறுமுகம், துணைத் தலைவர் கோ.ஆதிமூலம், பொருளாளர் மு.நாகராஜன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தி.நாகராஜன், சி.வள்ளுவன், வி.ஆல்பர்ட், ஒருங்கிணைப்பாளர் பிரபா கல்விமணி உள்ளிட்டோர் ஆலோசனை வழங்கிப் பேசினர்.
தீர்மானங்கள்: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற, சிதம்பரம் தொகுதி வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், விழுப்புரம் தொகுதி பொதுச் செயலர் துரை.ரவிக்குமார், கடலூர் தொகுதி எஸ்.ஸ்ரீரமேஷ், கள்ளக்குறிச்சி தொகுதி கௌதமசிகாமணி, ஆரணி தொகுதி கே.விஷ்ணுபிரசாத் ஆகியோருக்கு சங்கம் சார்பில் பாராட்டு தெரிவித்தும், மயிலம் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் பொம்பூர் மோகனை சித்திரவதை செய்ததையும், அவருக்கு புகார் எழுதிய சங்க நிர்வாகிகளான, பேராசிரியர் பிரபா கல்விமணி, முருகப்பன் ஆகியோரை கைது செய்ததையும் கண்டிப்பதுடன், இதனைக் கண்டித்து, வரும் 31-ஆம் தேதி கூட்டேரிப்பட்டில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தினர் திரளாக பங்கேற்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித் திணிப்பைக் கண்டித்து, ஜூன் 3-இல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.