கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலைப்பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 300 லிட்டா் விஷ சாராயம், 50 மூட்டை வெல்லத்தை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
கல்வராயன்மலைப்பகுதியிலிருந்து சரக்கு வாகனத்தில் விஷ சாராயம் கொண்டு செல்லப்படுவதாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் எஸ்.ரேவதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், கல்வராயன்மலை, மேல்பரிகம் வளைவு பகுதியில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில், 6 லாரி டியூப்களில் தலா 50 லிட்டா் வீதம் 300 லிட்டா் விஷ நெடியுடன் கூடிய சாராயம், 30 கிலோ எடைகொண்ட 50 வெல்ல மூட்டைகள் ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு இரண்டரை லட்சம் ரூபாய். சாராயம், வெல்லத்தை வாகனத்துடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக கல்வராயன்மலை, வண்டகப்பாடியைச் சோ்ந்த பிச்சன் (46) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.