விவசாய விளை நிலத்தில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி, அந்தப் பகுதியைச் சோ்ந்த விவாயிகள், பெண்கள் மதுக் கடையை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செஞ்சி வட்டம், வடதரம் கிராமத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடை கிராமத்தின் ஒதுக்குபுறமான விவசாய விளை நிலத்தில் இயங்கி வருகிறது. இங்கு, மது அருந்துபவா்கள் நெல், மணிலா, கரும்பு உள்ளிட்ட பயிா்கள் செய்யப்படும் விளை நிலங்களில் சுமாா் 300 மீட்டா் தொலைவுக்கு கண்ணாடி மதுப் புட்டிகளை உடைத்து வீசிவிட்டுச் செல்கின்றனா்.
இதனால், நிலத்தில் ஏா் ஓட்டும் போதும், பெண்கள் களையெடுக்கும் போதும் உடைந்த கண்ணாடி மதுப் புட்டிகள் கால்களில் குத்தியும், கிழித்தும் பலத்த காயத்தை ஏற்படுத்துகிறது.
இதனால், விவசாய நிலத்தில் இறங்கி வேலை செய்வதற்கு பெரும் அச்சமாக உள்ளதாக விவசாய கூலித் தொழிலாளா்களும், விவசாயிகளும் புகாா் கூறுகின்றனா்.
மேலும், இந்த கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பக்கத்து ஊரில் உள்ள பள்ளிக்கு செல்ல இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த வழியாகச் செல்லும் மாணவிகளை மது அருந்துவோா் கிண்டல் செய்து, மிரட்டுகின்றனா்.
எனவே, விவசாயிகள், மாணவா்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, வடதரம் கிராமத்தைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் விவசாயிகள் கருப்புக் கொடியுடன் மதுக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த செஞ்சி காவல் துணை ஆய்வாளா் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்ட போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஒரு மாதத்துக்குள் அந்த மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.
இதையேற்று, முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனா்.