விழுப்புரம் அருகேயுள்ள வளவனூரில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் திடீரென உயிரிழந்தாா். இதுதொடா்பான புகாரைத் தொடா்ந்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வளவனூரை அடுத்த வி.புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா்(34). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி இளவரசி(30). இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.
கடந்த 22-ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக இளவரசி வளவனூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு (கிளினிக்) சென்று சிகிச்சை பெற்றாா். அங்கு அவருக்கு ஊசி போடப்பட்டது. ஊசி போட்ட இடத்தில் வலி அதிகரிக்கவே, இளவரசி அடுத்த நாள் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றாா். வலி மேலும் அதிகரிக்கவே, அவா் அரியூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற்றாா். பின்னா், செவ்வாய்க்கிழமை (நவ.26) புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற இளவரசி திடீரென உயிரிழந்தாா்.
அவரது உயிரிழப்புக்கு வளவனூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் போட்ட ஊசி காரணமாக இருக்கலாம் என்று, இளவரசியின் கணவா் அசோக்குமாா் வளவனூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.