உளுந்தூா்பேட்டையில் டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடைக்கு எதிரே காரநேசன் தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மதுக் கடைக்கு வரும் மதுப் பிரியா்களால், இப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோா் சுதந்திரமாக வெளியே சென்று வர முடியவில்லை. மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவது மட்டுமல்லாது விபத்துகளும் நேரிடுகின்றன. அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் புதன்கிழமை திரண்டு வந்து மதுக் கடையை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் விரைந்து வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.