விக்கிரவாண்டி அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட எவர் சில்வர் பாத்திரங்களை தேர்தல் பறக்கும் படையினர் திங்கள் கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
விக்கிரவாண்டி அருகே தென்னமாதேவி பகுதியில் உள்ள செஞ்சி சாலையில் தனி வட்டாட்சியர் ஆனந்தன் தலைமையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர், போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல், எவர்சில்வர் பார்த்திரங்கள் கொண்டு செல்வது தெரிய வந்தது. அதனை நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.
வாகனத்தில் இருந்த தென்பேர் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ்(30), அர்ச்சுனன்(58) ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், ஆயுத பூஜையையொட்டி, சரவணன் என்பவரது பால் சங்கத்தில் பணிபுரிவோருக்கு வழங்க வாங்கிச் செல்வதாகத் தெரிவித்தனர். இருப்பினும், அதற்கான ஆவணங்களை அளிக்காததால், 650 எவர்சில்வர் பாத்திரங்களை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, விக்கிரவாண்டி வட்டாட்சியர் பார்த்திபனிடம் ஒப்படைத்தனர். அந்த பாத்திரங்கள் சார்-கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.