வாக்குறுதியை நிறைவேற்றவில்லை திராவிடக் கட்சிகளின் அரசுகள்: இயக்குநர் கௌதமன்

ஐம்பது ஆண்டுகால நந்தன் கால்வாய் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாமல் திராவிடக் கட்சிகளின் அரசுகள்

ஐம்பது ஆண்டுகால நந்தன் கால்வாய் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாமல் திராவிடக் கட்சிகளின் அரசுகள் மக்களுக்கு துரோகம் செய்து வருவதாக, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் குற்றஞ்சாட்டினார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில், அந்தக் கட்சியின் பொதுச் செயலரான திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் போட்டியிடுகிறார். அவர் இந்தத் தொகுதிக்குள்பட்ட கஞ்சனூர், நேமூர், மண்டகப்பட்டு, எசாலம், எண்டியூர், பிடாரிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மறைந்த அண்ணா ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட நந்தன் கால்வாய் திட்டம், ஐம்பது ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது, திராவிடக் கட்சிகளின் அரசுகள் மக்களுக்கு இழைத்து வரும் மிகப் பெரிய துரோகம். இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவர். தேர்தலில் நான் வெற்றி பெற்றால், நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து விவசாயத்தை மேம்படுத்துவேன். அனைத்து மக்களுக்கும் வீடு, சுகாதாரமான குடிநீர், தரமான சாலை வசதிகளை ஏற்படுத்துவேன். தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்பை வழங்குவேன் என்றார் கெளதமன். அவருக்கு ஆதரவாளர்கள், துணை நடிகர்கள் பலர் ஆதரவு திரட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com