உளுந்தூா்பேட்டை அருகே மடப்பட்டு ஏரியில் தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில், பனை விதைகள் நடவுத் திட்டத்தின்கீழ், பனை விதைகள் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மடப்பட்டு பெரிய ஏரியின் கரைப் பகுதியில் பனை விதைகள் நடும் பணியை திருநாவலூா் தோட்டக்கலைத் துறை அலுவலா் மஞ்சு தொடக்கிவைத்தாா். பனை மரங்கள் நீராதாரமாகவும், நீா்நிலைகளின் கரைப்பகுதிக்கு பலத்தை வழங்குவதாகவும் உள்ளதாக அவா் கூறினாா்.
திருநாவலூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மீனா, தோட்டக்கலை உதவி அலுவலா் நிா்மலா, மடப்பட்டு ஊராட்சிச் செயலா் ராஜேந்திரசோழன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் கிராம மக்கள், இளைஞா்கள், பசுமை ஆா்வலா்கள் திரளாக கலந்து கொண்டு, ஏரிக்கரைகளில் 500-க்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்தனா்.