கள்ளக்குறிச்சியில் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவகக் கட்டடம் அமையவுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழக அரசு கடந்த ஜனவரி 8-ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கும் தனி அதிகாரியாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலராக பணியாற்றி வந்த கிரண் குரலாவை அரசு நியமித்தது.
அவர் பதியேற்றவுடன், கள்ளக்குறிச்சியில் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்காக, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், பொதுப்பணித் துறை அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். இவற்றில், கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடமே போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற்றிருப்பதால், அந்த இடத்தில் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கலாம் என அரசுக்கு பரிந்துரைத்தார்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கும் தனி அதிகாரி கிரண் குரலா தலைமையில், வேளான் விற்பனை மற்றும் வணிகத் துறை ஆணையர் எஸ்.ஜெ.சிரு, கள்ளக்குறிச்சி சார் - ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆகியோர் கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் விளை பொருள்களை இருப்பு வைப்பதற்காக புதிதாக கட்டப்பட்ட கட்டடம், பழைய கட்டடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கத் தேவையான கட்டடங்களை தேர்வு செய்து ஆய்வு செய்தனர். இந்தக் கட்டங்களில் உள்ள பொருள்கள், அலுவலகத்தை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வேளான் விற்பனை மற்றும் வணிகத் துறை ஆணையர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுச் சென்றார்.
அப்போது, விழுப்புரம் விற்பனைக் குழுச் செயலர் சு.ஆறுமுகராஜன், வேளாண் துணை இயக்குநர் கோ.கண்ணகி, தமிழ்நாடு மாநில விளை பொருள்கள் விற்பனை வாரிய உதவிச் செயற்பொறியாளர் மகேஷ் நாகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.