செஞ்சி அருகே விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது, விஷப் பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தார்.
மேல்மலையனூர் வட்டத்துக்கு உள்பட்ட மணியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (67). இவர், தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் நாற்றங்காலுக்கு கடந்த 24-ஆம் தேதி அதிகாலை தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். பின்னர், மின் மோட்டாரை நிறுத்திவிட்டு கிணற்றின் ஓரமாக ராமச்சந்திரன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை விஷப் பாம்பு கடித்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராமச்சந்திரனை உறவினர்கள் மீட்டு, சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையிலும், பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமச்சந்திரன், அங்கு சனிக்கிழமை
உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், அவலூர்பேட்டை போலீஸார்
வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.