உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு டாஸ்மாக் மதுக் கடை ஊழியரை மர்ம நபர்கள் கட்டையால் தாக்கி, அவரிடமிருந்த ரூ.1.10 லட்சத்தை வழிப்பறி செய்ய முயன்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி மகன் கண்ணன் (40). இவர், கடலூர் மாவட்டம், ஆலடி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் விற்பனையாளராக உள்ளார். கண்ணன் வெள்ளிக்கிழமை இரவு மதுக் கடையை மூடிவிட்டு, மதுபானங்கள் விற்பனைத் தொகையான ரூ.1.10 லட்சத்துடன் ஆலடி பகுதியில் இருந்து களமருதூர் சாலை வழியாக பரிக்கல் நோக்கி பைக்கில் சென்றார்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திம்மிரெட்டிப்பாளையம் சாலை சந்திப்புப் பகுதியில் சென்றபோது, பின்னால் மற்றொரு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் இவரை முந்திச் சென்று தடுத்து நிறுத்தி, உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதனால், கண்ணன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அப்போது, அவரிடமிருந்த பணத்தை அவர்கள் பறிக்க முயன்றனர். உடனடியாக கண்ணன் கூச்சலிட்டதால், கிராம மக்கள் ஓடி வந்தனர். இதையறிந்த மர்ம நபர்கள், பைக்கில் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். இதன் காரணமாக, கண்ணனிடமிருந்த பணம் தப்பியது.இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த
புகாரின்பேரில், திருநாவலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக கண்ணன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து
விசாரித்து வருகின்றனர்.