கோட்டக்குப்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை, ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பர்கத் நகரை சேர்ந்த அகமது மகன் ஆஷிப் அகமது (32). இவர் புதுச்சேரி பழைய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள ரத்த பரிசோதனை நிலையத்தில் ஆய்வராக பணியாற்றி வருகிறார். இவர், தனது மனைவி முஷிதா பர்வினின் (28) பிரசவத்துக்காக வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கடந்த 9-ஆம் தேதி சென்றார். பின்னர், 10-ஆம் தேதி வீடு திரும்பிய அவர், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.
உள்ளே சென்ற பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 11 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3.50 லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.