விழுப்புரம் மாவட்ட சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையில், விழுப்புரம் மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள், சங்கத்துக்கு நன்கொடை வசூலித்து வழங்குதல் மற்றும் சிறுபான்மை மகளிருக்கான நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, உரிய பயனாளிக்கு நல உதவிகளை பெற்றுத் தருதல் போன்ற பணிகளைச் செய்கின்றனர்.
இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி தலைமை வகித்து, உறுப்பினர்கள் சேர்க்கையைத் தொடக்கிவைத்தார். சிறுபான்மையினர் நலக் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், சங்கத்தின் கெளரவச் செயலர் ரட்சகராஜர், உறுப்பினர்கள் ராஜ், புகழ்மதி, பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்தின் 13 வட்டங்களிலிருந்தும் புதிய உறுப்பினர்களாக ஜெகதீசன், ஜான் சாலமோன், விக்டர் அற்புதராஜ், சார்லஸ், வில்லியம்ஸ், ஜெய்சங்கர், டேவிட் ஜெயின் உள்ளிட்டோர் இணைந்தனர். உறுப்பினர் நன்கொடையையும் அவர்கள் செலுத்தினர்.