விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரிப்பது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி முடிவு செய்துள்ளது.
விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிழக்கு மாவட்டத் தலைவர் சையத்கலீல் வரவேற்றார். மாவட்டச் செயலர் எஸ்.எம்.அமீர்அப்பாஸ் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் சுல்தான்மைதீன், நகரத் தலைவர் சாகுல் ஹமீது, துணைச் செயலர் சபியுல்லா முகமது, நிர்வாகிகள் இப்ராஹிம், அப்துல் சலாம், சாகுல் அமீது, முஹம்மது பாரூக், முகமது யாசின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தேர்தலில், திமுக வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபடுவது, தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் தவறுகளை சுட்டிக் காட்டி பிரசாரம் செய்வது, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு, குலக் கல்வி முறை போன்றவற்றை கொண்டுவர முயற்சிப்பதையும், மத்திய, மாநில அரசுப் பணிகளில் தமிழர்களை புறக்கணித்து, வட இந்தியர்களை பணியில் அமர்த்தும் மத்திய அரசின் நடவடிக்கையையும் கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.