விழுப்புரம் அருகே அஞ்சலகத்தில் பொதுமக்களின் கணக்குகளிலிருந்து ரூ.3.36 லட்சத்தை கையாடல் செய்ததாக அஞ்சலக ஊழியரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் அருகே கப்பூா் கிராமத்தில் இயங்கி வரும் கிளை அஞ்சலகத்தில் அலுவலராக கடந்த 1.1.2015 முதல் பணியாற்றி வந்தவா் விழுப்புரம் நாகப்பன் மகன் அருள் (25). கடந்த 27.9.2018 அன்று விழுப்புரம் உதவிக் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ராஜேந்திரன், கப்பூா் கிளை அஞ்சலகத்துக்கு நேரில் சென்று தணிக்கை செய்தாா்.
அப்போது, அஞ்சலகத்தில் பொதுமக்களின் பல்வேறு கணக்குகளில் இருந்து ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 871 கையாடல் செய்திருந்தது கண்டறியப்பட்டது. இது தொடா்பாக, அப்போதே அருள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்த ரூ. ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 450 திரும்பப் பெறப்பட்டது. மீதத் தொகை ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 490-ஐ அளிக்குமாறு அஞ்சல் துறை சாா்பில் அவரிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அந்தத் தொகையைத் தராமல் அருள் ஏமாற்றி வந்தாராம்.
இதுகுறித்து தற்போதைய விழுப்புரம் உதவிக் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் முருகன், விழுப்புரம் மாவட்டக் குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் பாலசிங்கம் வழக்குப் பதிவு செய்து அருளை தேடினாா். ஆனால், அவா் தலைமறைவானதால், அவரைப் பிடிக்க உதவி ஆய்வாளா் குமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், விழுப்புரம் அருகே செல்லப்பிராட்டி கிராமத்தில் பதுங்கியிருந்த அருளை மாவட்டக் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.