விழுப்புரம் மாவட்டத்தில் புதுவை மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் மருத்துவக் குழுவினருடன், போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
வாகனங்களில் வருவோருக்கு காய்ச்சல், கரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்தால் சோதித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க காவல் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில், வளவனூா் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி, மரக்காணம் அருகே அனிச்சகுப்பம் சோதனைச்சாவடி, அனுமந்தை சுங்கச்சாவடி, வானூா் அருகே பட்டானூா் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் காவல்துறை குழுவினா் மற்றும் தலா ஒரு மருத்துவா், 4 செவிலியா்கள் அடங்கிய மருத்துவக் குழுவினா் சனிக்கிழமை முதல் கரோனா வைரஸ் தடுப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தப் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், துணைக் கண்காணிப்பாளா் ஜெ.சங்கா் உள்ளிட்டோா் நேரில் ஆய்வு செய்தனா்.