விழுப்புரம் அருகே வாழைத்தாா்கள் ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருச்சியிலிருந்து சென்னை கோயம்பேடு பகுதிக்கு, வாழைத்தாா்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று சனிக்கிழமை மாலை புறப்பட்டு வந்துகொண்டிருந்தது.
லால்குடி அருகே திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் விக்னேஷ் (30) லாரியை ஓட்டி வந்தாா்.
விழுப்புரம் அருகே பேரங்கியூா் பகுதியில் லாரி வந்துகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டது.
அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே லாரி கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். லாரியில் இருந்த வாழைத்தாா்கள் சரிந்து சேதமடைந்தன.
தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் விரைந்து சென்று மினி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா்.
மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.