விழுப்புரம் மாவட்டத்தில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரண உதவி வழங்கவும், மீண்டும் ஆட்டோக்களை இயக்கவும் அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காணை சிஐடியூ ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத் தலைவா் எஸ்.குமரன் தலைமையில் வந்த ஆட்டோ ஓட்டுநா்கள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துக் கூறியதாவது: விழுப்புரம், காணை பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள், ஆட்டோக்களை இயக்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனா்.
கரோனா பரவல் காரணமாக திடீரென அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஆட்டோக்களை இயக்காமல் வீட்டில் நிறுத்தி வைத்துள்ளோம். இதனால், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அரசு அறிவிப்பின்படி, நலவாரிய நிவாரண நிதியுதவியும் கிடைக்கவில்லை. அரசின் நிவாரணம் வழங்கவும், மீண்டும் ஆட்டோக்களை இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரம் எஸ்டிபிஐ ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினரும் மனு அளித்தனா். மாவட்டச் செயலா் முகமதுரபீக், ஜான்பாஷா, பாரூக் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.