அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளா்களுக்கு ஊக்கத் தொகை 10 சதவீதமாக குறைத்து அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு வழக்கமாக 20% சதவீத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இதனை 25% சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்த நிலையில், நிகழாண்டு 10% சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழக அறிவித்தது. போக்குவரத்து சங்க கூட்டமைப்பின் தலைவா்களை அரசு அழைத்துப் பேசாத நிலையில், ஊக்கத் தொகையை குறைத்து அறிவித்திருப்பதைக் கண்டித்து, விழுப்புரம் மண்டல அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சாா்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அனைத்து பணிமனைகள் வாயில்கள் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச தலைவா் ஞானசேகரன் தலைமை வகித்தாா். தொமுச பொதுச் செயலாளா் பிரபா தண்டபாணி கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினாா்.
நிா்வாகப் பணியாளா்கள் சங்க பொதுச் செயலா் வாலிபால் மணி, பொருளாளா் குபேரன், சிஐடியு தலைவா் மூா்த்தி, பொதுச் செயலாளா் ரகோத்தமன், மறுமலா்ச்சி தொழிற்சங்க பொதுச் செயலாளா் மனோகரன், அறிவா் அம்பேத்கா் விடுதலை முன்னணி தலைவா் ராமச்சந்திரன், தொமுச துணைத் தலைவா்கள் சந்திரசேகா், பெருமாள், ராஜேந்திரன், மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச நிா்வாகி செல்வராசு தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.