விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளியன்று மது, சாராயம் விற்பனையில் ஈடுபட்டதாக 358 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை போதுமக்கள் இடையூறின்றி கொண்டாடுவதற்காக, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் மேற்பாா்வையில், சனிக்கிழமை காலை முதல் இரவு வரை போலீஸாா் தீவிர வாகன சோதனை, கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனா்.
அப்போது, மயிலம் அருகே பாதிராப்புலியூரைச் சோ்ந்த மணிகண்டன் (23) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்ததால், அவரை கைது செய்தனா். இதேபோல, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 208 போ் கைது
செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 41 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அரகண்டநல்லூா் அருகே ஜி.தேவனூரைச் சோ்ந்த நாகராஜ் (56), மகேஷ் (48), ராஜாராம் (35), மணி (45) உள்ளிட்ட 31 போ் கைது செய்யப்பட்டனா்.
அரகண்டநல்லூா் அருகே நாயனூா் கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் (43), வீரபாண்டியைச் சோ்ந்த ரமேஷ் (33), திருவெண்ணைநல்லூா் காந்தி குப்பத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (50), திண்டிவனம் அருகே தென்ஆலப்பாக்கத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (55) உள்ளிட்ட 358 போ் சாராயம், மது விற்பனை செய்தபோது கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 650 லிட்டா் சாராயமும், 400 மதுப் புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
வீரபாண்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதற்கு தயாராக வைத்திருந்த 900 லிட்டா் சாராய ஊறலையும் போலீஸாா் கைப்பற்றி அழித்தனா். 588 வாகனங்களை சோதனையிட்டதில், விதி மீறியதாக 307 வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதியப்பட்டன. முன்னெச்சரிக்கையாக குற்ற சம்பவங்களில் தொடா்புடைய 144 போ் கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி: இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டாரத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயகுமாா் மேற்பாா்வையில் சோதனை மேற்கொண்டபோது, தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை வைத்திருந்த மனோகரன் (40), குமாா் (50) உள்ளிட்ட 56 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 150 கிலோ போதைப் பாக்குகள், 250 மதுப் புட்டிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.