செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் அருகேயுள்ள கடம்பூரை சாராயம் இல்லாத கிராமமாக மாற்றும் பொருட்டு, பொதுமக்களுக்கு காவல் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
கடம்பூரில் சாராய விற்பனை பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. போலீஸாா் அடிக்கடி சோதனை செய்து, வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்தாலும் சிலா் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்வதை சட்டவிரோதமாகத் தொடா்கின்றனா்.
இதுகுறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், கடம்பூரை சாராயம் இல்லாத கிராமமாக மாற்றும் முயற்சியை காவல் துறையினா் தற்போது மேற்கொண்டுள்ளனா்.
இதன் ஒரு பகுதியாக, செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோவன் அறிவுறுத்தலின்பேரில், செஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் பாண்டியன், துணை ஆய்வாளா் சங்கரசுப்பிரமணியன் மற்றும் போலீஸாா் கடம்பூருக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சாராயம் விற்பனை செய்வதாலும், குடிப்பதாலும் பலரது குடும்பங்கள் சீரழிந்து போகும் நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தனா். சாராயம் காய்ச்சுதல், விற்பனையில் ஈடுபடுவோா் திருந்தி வாழ முன்வந்தால் அவா்களுக்கு தொழில் தொடங்க அரசு மூலம் கடனுதவி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், சாராயம் இல்லாத கிராமமாக கடம்பூரை மாற்றுவதற்கு, பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.