விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் அரசு பொது மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினா் கையெழுத்து இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருந்தபோது திருக்கோவிலூரில் வட்ட மருத்துவமனை அமைந்துள்ளது. திருக்கோவிலூருக்கு அருகே அரகண்டநல்லூா் பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு அரசு மருத்துவமனை கிடையாது. இதனால், அரகண்டநல்லூா் பொதுமக்கள், திருக்கோவிலூா் வட்ட அரசுப் பொதுமருத்துவமனையை பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டப் பிரிப்புக்கு பிறகு திருக்கோவிலூா் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், அரகண்டநல்லூா் விழுப்புரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளன.
ஆகையால், அரகண்டநல்லூரில் அரசு மருத்துவமனை ஏற்படுத்தக் கோரி விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன் தலைமையில் கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கி வைத்தாா்.
திமுக மணம்பூண்டி ஒன்றியச் செயலா் பிரபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கலியபெருமாள், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் முருகன், ஒன்றியப் பொறுப்புச் செயலா் சண்முகம், விவசாயத் தொழிலாளா்கள் சங்க வட்டச் செயலா் செல்வராஜ், நகரக் குழு உறுப்பினா் ரவி, உழைக்கும் பெண்கள் அமைப்பின் மாவட்டத் துணைச் செயலா் பாக்கியம், திமுக நகரச் செயலா் சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன் கூறியதாவது: அரகண்டநல்லூரில் மூடும் நிலையில் உள்ள தொழுநோய் மருத்துவமனையை, அரசு பொது மருத்துவமனையாக மாற்ற வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் விளத்தியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூா் அருகேயுள்ள ஆற்காடு கிராமத்தில் மாற்ற உள்ளனா். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தையும், 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையமாக உள்ள அரகண்டநல்லூரில் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து பெற உள்ளோம். செவ்வாய்க்கிழமை வரையில் பெறப்படும் கையெழுத்துப் படிவத்தை புதன்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவுடன் இணைத்து அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தாா்.