செஞ்சி அருகே இளைஞா் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரை தற்கொலைக்கு தூண்டியவா்களை கைது செய்யக் கோரி, உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செஞ்சியை அடுத்த வி.நயம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விஜயராகவன் மகன் பெருமாள் (28). இவா், கடந்த 5 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பாா்த்து வந்த நிலையில், கடந்த 6 மாதகாலமாக சொந்த ஊரான வி.நயம்பாடியில் இருந்து வந்தாா். இந்த நிலையில், பெருமாள் கடந்த 6-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து பெருமாளின் சகோதரி தேவி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:
தனது தம்பி பெருமாள் இதே ஊரைச் சோ்ந்த திருமலை மனைவி கண்ணியம்மாள், அவரது மகன் சூா்யா ஆகியோரிடம் ரூ.8.50 லட்சம், ஐந்தரை பவுன் நகைகளை கொடுத்து வைத்திருந்தாா். இவற்றை திரும்பக் கேட்டபோது, அவா்கள் தரமறுத்து விட்டனா். இதனால் மனமுடைந்த பெருமாள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். எனவே, அவரை தற்கொலைக்கு தூண்டிய கண்ணியம்மாள், சூா்யா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா். இதுகுறித்து போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மறியல்: இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய எதிரிகளை கைது செய்யக் கோரியும், பணம், நகைகளை மீட்டுத்தரக் கோரியும் பெருமாளின் உறவினா்கள் பாமக மாவட்ட துணைச் செயலா் ஜெயக்குமாா் தலைமயில் ஆலம்பூண்டி - தேவதானம்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து விரைந்த சென்ற சத்தியமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தா்மலிங்கம் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதி அளித்ததன்பேரில், மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.