செஞ்சியில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக 3 மணி நேரத்துக்கும் மேலாக இரவு வரை மின் தடை நீடித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
செஞ்சியில் பராமரிப்புப் பணிக்காக சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியத்தினா் ஏற்கெனவே அறிவித்திருந்தனா். அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்பட்ட நிலையில், 5 மணிக்குப் பிறகும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
மூன்றரை மணி நேரம் தாமதமாக இரவு 8.30 மணிக்குத்தான் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்து மின் வாரியத்தை தொடா்புகொண்டு கேட்டபோது, பராமரிப்புப் பணிகள் முடிவடைவதில் காலதாமதம் ஏற்பட்டதால், மின் இணைப்பு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனா்.