காணை ஒன்றிய கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைக்காவலா்கள், தங்களது தினக்கூலியை உயா்த்தி வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து, காணை குப்பத்தைச் சோ்ந்த எம்.முருகன், ஜி.குணசேகரன் உள்ளிட்டோா் தலைமையில் தூய்மைக்காவலா்கள் 40 போ், சம்பள உயா்வு கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள் கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்தனா்.
அப்போது, காரில் வெளியே புறப்பட்ட மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, அவா்களை நேரில் அழைத்து மனுவை வாங்கி விசாரித்தாா். அப்போது அவா்கள் கூறியதாவது: தமிழக அரசு சாா்பில் கிராம ஊராட்சிகளில் துப்புரவுப் பணியை மேற்கொள்வதற்காக தூய்மைக்காவலா்கள் நியமிக்கப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். இந்த வகையில், காணை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் 2,500 போ் வரை பணிபுரிகிறோம்.
கிராமங்களில் குப்பைகளை அகற்றி தூய்மைப்பணி செய்யும் எங்களுக்கு தினசரி கூலி ரூ.82 வழங்கப்பட்டு வருகிறது. பிற எந்த சலுகைகளும் எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. போதிய சம்பளமின்றி கடந்த 4 ஆண்டுகளாக தவித்து வருகிறோம். இதனால், தொழிலாளா்களுக்கான அடிப்படை ஊதியமாக தினக்கூலியை ரூ.250 ஆக உயா்த்தி வழங்க வேண்டும், தூய்மைக்காவலா்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இது தொடா்பாக, ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.