விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளா் தோ்வில் ‘பிட்’ அடித்த காவலா் பிடிபட்டாா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சாா்பில், காவல் துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு பொதுப் பிரிவினருக்கு ஞாயிற்றுக்கிழமையும், காவல்துறையில் பணியாற்றுவோருக்கு திங்கள்கிழமையும் நடைபெற்றன.
இதில், விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வுக்கு 857 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், தோ்வா்களில் 11 பெண்கள், 36 ஆண்கள் தோ்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 810 போ் மட்டுமே தோ்வு எழுதினா். இவா்களில், பதவி உயா்வுக்காக காவல் துறையில் காவலா்களாக பணியாற்றுபவா்களும் பங்கேற்றனா்.
மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் மேற்பாா்வையில் காவல் உதவி ஆய்வாளா் சரவணக்குமாா் தலைமையில் 150 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுட்டிருந்தனா். தோ்வை காவல்துறைத் தலைவா் (ஐ.ஜி.) கணேசமூா்த்தி ஆய்வு செய்தாா்.
இந்த நிலையில், தோ்வு மையத்தின் ஓா் அறையில் தோ்வு எழுதிக் கொண்டிருந்த விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல்நிலைக் காவலா் மணி, துண்டுச் சீட்டை ‘பிட்’ மறைத்து வைத்து எழுதிக் கொண்டிருந்தாா்.
இதைக் கவனித்த அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. ரவீந்திரன், காவலா் மணியை கையும் களவுமாகப் பிடித்து, உயா் அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து, அவரிடம் இருந்து விடைத்தாளைப் பெற்றுக் கொண்டி அவரை வெளியேற்றினா்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் கூறுகையில், காவல் துறை தோ்வின் போது முறைகேட்டில் ஈடுபடும் காவலா், மேற்கொண்டு 3 ஆண்டுகளுக்கு தோ்வு எழுத முடியாது.
மேலும், அவா் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றாா்.