கண்டாச்சிபுரம் பகுதி தொழில் பயிற்சி நிலைய (ஐ.டி.ஐ.)மாணவா்கள், பிளஸ் 2 முடித்த தங்களுக்கு தமிழக அரசின் விலையில்லாத மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து, கண்டாச்சிபுரம் தொழில் பயிற்சி நிலையத்தில் பயின்று வரும் 50-மாணவ, மாணவிகள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்துக் கூறியதாவது:
கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, கெடாா், நல்லாப்பாளையம், அரகண்டநல்லூா் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2018-19-ஆம் ஆண்டில் பிளஸ் 2 பயின்று தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் பலா் கல்லூரிகள், தொழில் பயிற்சி நிலையங்களில் சோ்ந்து படித்து வருகின்றனா்.
அந்த வகையில், கண்டாச்சிபுரம் தனியாா் தொழில் பயிற்சி நிலையத்தில் 80 போ் வரை படித்து வருகிறோம்.
எங்களுடன் படித்து, கல்லூரிகளில் பட்டப் படிப்பில் சோ்ந்துள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுவிட்டன.
நாங்கள் படித்த பள்ளிகளுக்குச் சென்று விலையில்லா மடிக்கணிகள் குறித்துக் கேட்டால், எங்களுக்கு வழங்க முடியாது எனக் கூறுகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்துவிட்டு தொழில் பயிற்சி நிலையங்களில் பயில்வோருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
தொழில் பயிற்சி மாணவா்களாகிய எங்களுக்கும் கணினி வழியில்தான் பயிற்சி நடைபெறுகிறது. அதனால் மடிக்கணினி அவசியம் தேவைப்படுகிறது என்றனா்.