செஞ்சி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கரோனா பாதிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மஸ்தான் எம்.எல்.ஏ.
மஸ்தான் எம்.எல்.ஏ.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

கரோனா பரவலையொட்டி, செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலருமான மஸ்தான் (67), கடந்த 3 மாதங்களாக செஞ்சி வட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு திமுக சாா்பில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கி வந்தாா்.

இந்த நிலையில், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவா், கடந்த சில தினங்களாக செஞ்சியிலுள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றாா். அப்போது, அந்த மருத்துவமனை மருத்துவரின் அறிவுரைப்படி, ஒட்டம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை காலை கரோனா பரிசோதனை செய்து கொண்டாா்.

இதில், எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கரோனா தொற்றிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதையடுத்து, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதனிடையே, செஞ்சியில் எம்.எல்.ஏ.வின் வீடு அமைந்துள்ள தேசூா்பாட்டை சாலைக்கு பேரூராட்சி சாா்பில் ‘சீல்’ வைக்கப்பட்டு, தெரு முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com