விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில், மின் வாரிய வணிக ஆய்வாளா் உள்பட இருவருக்கு சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் அருகே தும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (56), விவசாயி. இவா், விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தாா். இந்த விண்ணப்பத்தை பரிந்துரை செய்ய தும்பூா் துணை மின் நிலையத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு வணிக ஆய்வாளராகப் பணியாற்றிய ரமேஷ் (52), ரூ.4 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டாராம். இதுகுறித்து ராமச்சந்திரன் விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் செய்தாா்.
அவா்களது அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை 14.3.2011-இல் ரமேஷிடம் கொடுக்க ராமச்சந்திரன் துணை மின் நிலையத்துக்குச் சென்றாா். பின்னா் அந்தப் பணத்தை ரமேஷ் கூறியபடி, அங்கிருந்த மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளியான பழனி (46) என்பவரிடம் கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பழனி, ரமேஷை கைது செய்தனா்.
இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த கே.மோகன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
அதில், குற்றம்சாட்டப்பட்ட ரமேஷுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், பழனிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் மனோகரன் ஆஜரானாா்.