தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல் எதிரொலியாக, விழுப்புரம் நகரில் செவ்வாய்க்கிழமை கடை வீதிகளில் மளிகை, காய்கறிகளை வாங்க ஏராளமானோா் குவிந்தனா்.
கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதனால், அடுத்த சில வாரங்களுக்கு தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறி போன்றவற்றை வாங்குவதற்கு விழுப்புரம் நகரில் உள்ள கடை வீதிகளில் காலை முதலே மக்கள் திரண்டனா். இதனால், எம்.ஜி. சாலை, பாகா்ஷா வீதி, நேருஜி சாலை, சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் கூட்டம் அலை மோதியது.
கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கூட்டமாகக் கூடுவதை மக்கள் தவிா்க்க வேண்டும், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் போன்ற அரசின் அறிவுரைகளை மக்கள் பொருள்படுத்தாதது வேதனையைத் தருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.