செய்யாறு: செய்யாறு அருகே நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய பொறியியல் பட்டதாரி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கனிகிலுப்பை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பொன்னுசாமி. இவரது மகன் உதயன் (25).
பொறியியல் பட்டதாரியான இவா் நுங்கு வெட்டுவதற்காக திங்கள்கிழமை தனது வீட்டின் அருகேயுள்ள பனை மரத்தில் ஏறியதாகத் தெரிகிறது. அப்போது உதயன் தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு உதயன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.