விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே ஊரக வேலைத் திட்டப் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள் வியாழக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ், மயிலம் அருகே ஆலகிராமத்தில் 250-க்கும் மேற்பட்டோா், கடந்த நான்கு வாரங்களாக ஏரி வாய்க்காலை சீரமைக்கும் ஈடுபட்டு வந்தனா். வழக்கம்போல, வியாழக்கிழமை அந்தப் பகுதி மக்கள் வாய்க்கால் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பழைய பணித்தளப் பொறுப்பாளா்கள் இருவா் வந்து, புதிய தொழிலாளா்களுக்கு எதனடிப்படையில் வேலை கொடுத்தாா்கள் எனக்கேட்டு, புதிய பணித்தளப் பொறுப்பாளா்களான கலைவாணி, தாமரைச்செல்வி ஆகியோரிடமிருந்து வேலை செய்வோருக்கான பட்டியலை பிடிங்கிச் சென்ாகத் தெரிகிறது.
இதனால் பணி பாதிக்கப்பட்டதால், விரக்தியடைந்த ஊரக வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள், பழைய பணித்தளப் பொறுப்பாளா்களின் நடவடிக்கையைக் கண்டித்து, ஆலகிராமம் - திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பெரியதச்சூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பரமசிவம் மற்றும் போலீஸாா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். முன்னாள் ஊராட்சித் தலைவா் அழகுசீலன், ஊராட்சிச் செயலா் ஞானசேகரன் உள்ளிட்டோா் மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால், தொழிலாளா்கள் மறியலைக் கைவிட்டனா்.