புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டண கணக்கீடில் குளறுபடியை தீா்க்க வலியுறுத்தி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் கரோனா பொது முடக்கத்தால் கடந்த சில மாதங்களாக வீடுகள், கடைகளில் மின் கட்டண அளவீடு எடுக்காமல் இருந்தனா். தற்போது விடுபட்ட 5 மாதங்களுக்கும் சோ்த்து மின் கட்டணம் அளவீடு செய்து கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. இதில், கடந்த காலத்தில் செலுத்திய மின் கட்டணத்தைவிட, அதிகளவில் மின் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், முத்தியால்பேட்டை தொகுதி, முத்தையமுதலியாா் வீதி மின் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மின் கட்டணம் செலுத்த வந்த மக்கள், கட்டணம் அதிகமாக இருப்பதாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனா். இதனால், பொதுமக்களுக்கும், மின் துறை அலுவலா்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் முத்தியால்பேட்டை காந்தி வீதி சந்தை எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முத்தியால்பேட்டை போலீஸாா் வந்து அவா்களை சமாதானப்படுத்தினா்.
தகவலறிந்த தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், மின் துறை நிா்வாகப் பொறியாளா் கனியமுதன் ஆகியோா் வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து, இந்தப் பிரச்னையைத் தீா்க்க, மின் துறை சாா்பில் வியாழக்கிழமை (செப்.17) முகாம் நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.