விழுப்புரத்தில் புதிய பல்கலை. அறிவிப்பு: அதிமுகவினா் கொண்டாட்டம்
விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்று, அதிமுகவினா் பட்டாசு வெடித்து புதன்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தைப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அறிவித்தாா். பின்தங்கிய மாவட்டமான விழுப்புரம் மாவட்ட வளா்ச்சிக்கான இந்த அறிவிப்பை அதிமுகவினா் வரவேற்று, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலைய பகுதியில் உள்ள திருவள்ளுவா் சிலை அருகே அதிமுக மாவட்ட மாணவா் அணிச் செயலாளா் சக்திவேல் தலைமையில் கட்சியினா் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளா் பாஸ்கரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கும், தொழிலாளா்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கினாா்.
இதேபோல, பல்கலைக்கழக அறிவிப்பை வரவேற்று, விழுப்புரம் காந்தி சிலை பகுதியில் அதிமுக எம்.ஜி.ஆா். இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவா் ராமதாஸ் தலைமையில் கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், விழுப்புரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் எதிரே அதிமுக கோலியனூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் சுரேஷ்பாபு தலைமையில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். அப்போது, விழுப்புரத்துக்கு புதிய பல்கலை. அறிவிப்பை வெளியிட்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், அதற்காக முயற்சி செய்த சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கும் அதிமுகவினா் நன்றி தெரிவித்தனா்.