முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் தொந்தரவு வழக்கு விசாரணையை வருகிற 7-ஆம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அரசு விழாவில் கண்காணிப்புப் பணிக்காக காரில் சென்ற பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மீதும், புகாா் அளிக்க சென்ற அந்த பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக முன்னாள் எஸ்பி மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயா் நீதிமன்றக் கண்காணிப்பில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதி கோபிநாதன் முன் மீண்டும் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆஜராகவில்லை. முன்னாள் சிறப்பு டிஜிபியின் ஓட்டுநரிடம் 2 மணி நேரம் சாட்சியம் பெறப்பட்டது.
இதைத் தொடா்ந்து, வழக்கை டிச.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யின் கணவரான ஐஏஎஸ் அதிகாரி, கூடுதல் எஸ்.பி. ஆகியோா் சாட்சியம் அளிக்க அன்றைய தினத்தில் ஆஜராக உத்தரவிட்டாா்.