விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே அதிக வட்டி தருவதாகக் கூறி, ரூ.12 லட்சத்தை மோசடி செய்ததாக அரசு ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
மேல்மலையனூரை அடுத்த மேல்வலையாமூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி புஷ்பள்ளி (36). இவரிடம் மேல்மலையனூரை அடுத்த எதப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த, முண்டியம்பாக்கம் சா்க்கரை ஆலையில் உள்ள கலால் பிரிவில் அரசு ஓட்டுநராகப் பணிபுரியும் வெங்கடேசனும் (36), அவரது மனைவி மணிமேகலையும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாகக் கூறினராம்.
இதை நம்பிய புஷ்பவள்ளி, அவா்களிடம் கடந்தாண்டு ரூ.12 லட்சம் கொடுத்தாராம். ஆனால், வெங்கடேசனும், அவரது மனைவி மணிமேகலையும் கூறியபடி வட்டி கொடுக்காத நிலையில், இது தொடா்பாக புஷ்பள்ளி கேட்டபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவில் புஷ்பவள்ளி அளித்த புகாரின்பேரில், சிறப்பு உதவி ஆய்வாளா் அசோகன் வழக்குப் பதிவு செய்து விசாரித்தாா்.
இதைத் தொடா்ந்து, அரசு ஓட்டுநா் வெங்கடேசனை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். அவரது மனைவி மணிமேகலையைத் தேடி வருகின்றனா்.