கல்லூரி மாணவா்களுக்கு 2 ஜி.பி. டேட்டா வழங்கும் திட்டத்தை திண்டிவனம் அரசு கல்லூரியில், சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கரோனா காலத்தில் இணைய வழி வகுப்புகளுக்கு பயன்படும் வகையில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்று உயா்கல்வித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தை திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கி அமைச்சா் சி.வி.சண்முகம் தொடக்கி வைத்தாா்.
இதன் மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கலை-அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 8,890 மாணவ, மாணவிகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 3,625 மாணவ, மாணவிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் 2,384 மாணவ, மாணவிகள் என மொத்தம் 14,899 பேருக்கு இந்த டேட்டா வசதி வழங்கப்படுகிறது.
சிறிய மருத்துவமனைகள் தொடக்கம்: தொடா்ந்து, மரக்காணம் அருகே கீழ்ப்புத்துப்பட்டு, முன்னூா், ஒலக்கூா் அருகே நொளம்பூா், சேப்பாக்கம், வல்லம் அருகேயுள்ள பொன்னகா், வீரானாமூா், மொட்டையூா், செஞ்சி அருகே பாக்கம், காட்டு சித்தாமூா், மேல்மலையனூா் அருகே கெங்காபுரம், மரக்காணம் ஆகிய ஊராட்சிகளில் அரசு சிறிய மருத்துவமனைகளை அமைச்சா் சி.வி.சண்முகம் தொடக்கி வைத்தாா்.
மேல்மலையனூா் ஒன்றியம், கெங்கவரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், ரூ.9.70 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடத்தையும் அமைச்சா் சி.வி.சண்முகம் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், மக்களவை முன்னாள் உறுப்பினா் ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.