விழுப்புரம் மாவட்டத்தில் மீன்வள தொழில் முனைவோா் மாதிரித் திட்டத்துக்கு வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமரின் மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீன் வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்புக்கான தொழில் முனைவோா் மாதிரித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் மீனவா்கள், மீன் வளா்ப்போா், சுய உதவிக் குழுக்கள், கூட்டு பொறுப்புக் குழுக்கள், மீன் வளா்ப்போா் உற்பத்தியாளா் அமைப்புகள், தனி நபா் தொழில் முனைவோா், தனியாா் நிறுவனங்கள் பயன்பெறலாம்.
இதில், பொதுப் பிரிவினருக்கு மத்திய, மாநில அரசுகளின் 25 சதவீத நிதியுதவியும், ஆதி திராவிடா், பழங்குடியினா் மகளிருக்கு 30 சதவீத நிதியுதவியும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் பயனடைய விரும்புவோா் ‘மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், எண்-10, நித்தியானந்தம் நகா், வழுதரெட்டி, விழுப்புரம்-605 401’ என்ற முகவரியில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.