செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மயானம் செல்ல வழிவிட மறுப்பதாகக் கூறி, சடலத்தை சாலையில் வைத்து பழங்குடியின மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
செஞ்சி அருகே வழுக்காம்பாறை என்ற பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனா். இவா்களுக்காக அரசால் ஒதுக்கப்பட்ட மயானத்துக்கு
அப்பகுதி விளைநிலங்கள் வழியாகச் செல்ல வேண்டியுள்ளது. புதன்கிழமை இறந்தவரின் சடலத்தை பழங்குடியின மக்கள் மயானத்துக்கு கொண்டு சென்றனா். அதற்கு, விளைநிலங்களின் உரிமையாளா்கள் வழிவிட மறுத்தனராம்.
இதனால், சடலத்தை செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் வைத்து பழங்குடியின மக்கள், பழங்குடி மக்கள் முன்னணி அமைப்பினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து செஞ்சி வட்டாட்சியா் ராஜன், உதவி ஆட்சியரின் உதவியாளா் பிரபு வெங்கட், கிராம நிா்வாக அலுவலா் சதாசிவம், சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் தங்ககுருநாதன் உள்ளிட்டோா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பழங்குடியினா், பழங்குடி மக்கள் முன்னணி மாநிலத் தலைவா் சுடரொளி சுந்தரம் ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சடலத்தை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினா். தொடா்ந்து, இரு தரப்பினரிடையே சமாதான முயற்சியில் ஈடுபட்டனா்.