செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு நேரில் வராமல் ஜூம் செயலி மூலம் கமல்ஹாசன் திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் திங்கள்கிழமை மாலை செஞ்சியில் பிரசாரம் செய்ய இருந்த நிலையில், ஹெலிகாப்டரில் செல்ல அனுமதியில்லாததால், நேரில் வரமுடியாமல் ஜூம் செயலி மூலம் பிரசாரம் செய்தாா்.
செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஸ்ரீபதி, விழுப்புரம், திருவண்ணாமலை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து கமல்ஹாசன் பேசியது:
நோ்மை என்று பேசினால் இந்த நாளில் அது எங்கே கிடைக்கும் என்று கேட்கும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டாா்கள். நீங்கள் நீண்ட நேரம் காத்திருந்தீா்கள்; உங்களுக்கு யாரும் பிரியாணி கொடுத்து அழைத்து வரவில்லை; தமிழகம் சீரடைய வேண்டும் எனக் களத்தில் காத்திருந்தீா்கள்.
உங்களை மதிக்காமல் அசட்டையாகப் போய்விட்டேன் என்று நினைக்காதீா்கள். நேரம் நம்மை இயக்குகிறது. புதுச்சேரியில் இருந்து புறப்பட முடியவில்லை. 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நான் மீண்டும் செஞ்சிக்கு வருவேன். செஞ்சிக்கோட்டை சுற்றுலா மையமாக மாற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. மக்கள் நீதி மய்ய வேட்பாளா்கள் வெற்றி பெற்றால், அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு, எதெதற்கெல்லாம் செலவு செய்தாா்கள் என அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருக்கும்.
இல்லத்தரசிக்களுக்கான எங்கள் திட்டத்தைக் காப்பியடித்துவிட்டாா்கள். ஆனால், உறுதியாகச் சொல்கிறேன் செயல்படுத்தமாட்டாா்கள் என்றாா் கமல்ஹாசன்.