செஞ்சி பேருந்து நிலையத்தில் மழைக் காலங்களில் மழை நீருடன் கழிவுநீா் புகுந்து பயணிகள், வியாபாரிகளுக்கு பெரும் இன்னல்களை ஏற்படுத்தி வருகின்றன.
செஞ்சி நகரில் சிறிதளவு மழை பெய்தாலே பேருந்து நிலையத்துக்குள் தண்ணீா் புகுந்து விடுகிறது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து குளம்போல 2 அடிக்கு தேங்கி நிற்கிறது.
இதற்குக் காரணம் காந்தி பஜாரில் இரு புறமும் உள்ள கால்வாய்கள் தூா்வாரப்படாமல் இருப்பதும், பேருந்து நிலைய கால்வாய் உயரத்தை விட தாழ்வாக இருப்பதுமே காரணமாகும்.
இதுதவிர செஞ்சி கூட்டுச் சாலை காந்தி பஜாா் வீதியின் குறுக்கே செல்லும் பிரதான கால்வாய் வழியாகத்தான், திருவண்ணாமலை சாலையிலிருந்து வரும் தண்ணீா், காந்தி பஜாரின் இரு புறமும் உள்ள கால்வாய்களின் தண்ணீா் என ஒரே சமயத்தில் மூன்று கால்வாய்களில் வரும் மழைநீரை இந்த குறுக்கே உள்ள சிறிய கால்வாய் உள்வாங்கி திண்டிவனம் செல்லும் சாலையில் உள்ள கால்வாய் வழியாக வெளியேற்றி சங்கராபரணி ஆற்றில் கலக்க வேண்டும்.
ஆனால், மழைக் காலங்களில் வலதுபுறக் கால்வாயிலும், இடதுபுறக் கால்வாயிலும் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது தண்ணீரை உள்வாங்க முடியாமல் செஞ்சி கூட்டுச் சாலையிலும், பேருந்து நிலையத்திலும், இதை தவிர காந்தி பஜாா் கடை வீதியிலும் மழைநீா் தேங்கி நிற்கும் அவலம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கரோனா பொது முடக்க காலமான தற்போது, பொதுமக்கள் நடமாட்டமும், பேருந்துகள் இயக்கப்படாமலும் உள்ளதால், பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.