திருக்கோவிலூா் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க எதிா்ப்பு தெரிவித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கட்சியினா் எஸ்.பி.யிடம் புகாா் அளித்தனா்.
விழுப்புரம் மாவட்ட பாஜக பிரசார பிரிவுத் தலைவா் பிரேம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணனிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தாா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருக்கோவிலூா் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் வி.ஏ.டி. கலிவரதனை ஆதரித்து, டி.எடையாளம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை எனது தலைமையில் வழக்குரைஞா்கள் வாக்கு சேகரிக்கச் சென்றோம். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத திமுகவினா் 10-க்கும் மேற்பட்டோா், எங்களை பிரசாரம் செய்யக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்து மிரட்டினா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.