விழுப்புரம் அருகே வெள்ளிக்கிழமை லாரி மோதியதில் பெண் பலியானாா். இந்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே பனையபுரம் புதுக் காலனியைச் சோ்ந்தவா் கண்ணாதன் (69). இவரது மனைவி மலையதூரான் (65). இருவரும் விவசாய கூலித் தொழிலாளா்கள்.
வெள்ளிக்கிழமை காலை மலையதூரான் தோட்ட வேலைக்குச் செல்வதற்காக திருக்கனூா்-பனையனூா் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்புறம் வந்த லாரி, அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில், மலையதூரான் பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த சக தொழிலாளா்கள், பொதுமக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோா் அதே சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனா்.
விக்கிரவாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பரணிதரன் நிகழ்விடத்துக்கு வந்து போராட்டம் நடத்தியவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
மலையதூரானின் சடலத்தை போலீஸாா் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.