கரோனா தொற்று தீவிர பரவலையொட்டி, தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரைகள், பூங்காக்களில் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அந்த இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை காரணமாக, தொற்று அதிகரித்து ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இரவு நேர ஊரடங்கு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடற்கரைகள், பூங்காங்கள், உயிரியல் பூங்காக்கள் போன்ற இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. பொம்மையாா்பாளையம் கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை போலீஸாா் திருப்பி அனுப்பினா்.
இதேபோல, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களில் பொதுமக்கள் வந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இங்கு வரும் பொதுமக்களிடம் கரோனா புதிய கட்டுப்பாடுகளை போலீஸாா் எடுத்துக் கூறி திருப்பி அனுப்பி வருகின்றனா். இதனால், மாவட்டத்தில் உள்ள கடற்கரைகள், பூங்காக்களில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.