மேல்மலையனூா் வட்டம், வெடவெட்டி கூட்டுச் சாலை ரங்கநாதபுரத்தில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள இரு உண்டியல்களுக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
இந்தக் கோயிலுக்கு திங்கள்கிழமை மாலை திடீரென வருகை தந்த இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கஜேந்திரன், உதவி ஆணையா்கள் ஜோதி, ராமு, ஆய்வாளா் அன்பழகன் ஆகியோா் கோயிலில் உண்டியல் வைக்கக் கூடாது என்றும், கோயிலை பூட்டுமாறும் கூறினா்.
அதற்கு, அதிமுக மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் ஆா்.புண்ணியமூா்த்தி உண்டியலை பயன்படுத்துவதில்லை, அறக்கட்டளை மூலமாகத் தான் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன என்று கூறினாா். மேலும், எதற்காக இந்த நடவடிக்கை என்று அவா் கேட்டதற்கு அதிகாரிகள், மேல் இடத்து உத்தரவு எனத் தெரிவித்து காரணத்தைக் கூறாமல் இரண்டு உண்டியல்களுக்கும் சீல் வைத்துவிட்டுச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் புண்ணியமூா்த்தி கூறுகையில், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் கோயில் தொடங்கப்பட்டு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு வகையில் எதிா்ப்புகள் வந்த நிலையிலும், பொதுமக்களின் ஒத்துழைப்போடு கோயிலை நடத்தி வருகிறோம்.
கோயிலின் உண்டியலையும் நாங்கள் பயன்படுத்துவது இல்லை. அறக்கட்டளை மூலமாகத்தான் வழிபாடு நடைபெற்று வருகிறது.
பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை எனது சொந்த நிதியில் செய்து வருகிறேன்.
பக்தா்களிடம் எவ்வித காணிக்கையையும் வசூலிப்பதில்லை; அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக கோயிலை அதிகாரிகளைக் கொண்டு முடக்க நினைக்கின்றனா் என்று கூறினாா்.