விழுப்புரத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சிறுவன் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக தகவல் தெரிந்தவா்கள் காவல் துறைக்கு தெரிவிக்க தொலைபேசி எண் வெளியிடப்பட்டது.
விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள இஸ்திரி கடை வண்டியில் சுமாா் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் சடலம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மீட்கப்பட்டது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விழுப்புரம் மேற்கு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆனால், சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் யாா் என்று இதுவரை அடையாளம் தெரியவில்லை. மேலும், அந்தச் சிறுவன் கொலை செய்யப்பட்டாரா அல்லது உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
இதனிடையே, அந்தச் சிறுவனின் சடலத்தை 2 போ் தோளில் சுமந்து வரும் விடியோ போலீஸாருக்கு கிடைத்துள்ளது. இதை போலீஸாா் புதன்கிழமை இரவு வெளியிட்டனா்.
இந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் குறித்தோ அல்லது அவரின் சடலத்தை தோளில் சுமந்து வரும் நபா்கள் குறித்தோ தகவல் தெரிந்தால், பொதுமக்கள் விழுப்புரம் மாவட்டக் காவல் துறைக்கு 04146222172 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா தெரிவித்தாா்.